தத்ப்புர் (குர்ஆனை சிந்தித்தல்) செய்வதற்கான நடைமுறை குறிப்புகள்

 



தத்ப்புர் (குர்ஆனை சிந்தித்தல்) செய்வதற்கான நடைமுறை குறிப்புகள்


1. சரியான சூழலைத் தேர்ந்தெடுங்கள்


உங்கள் மனதும் இதயமும் குர்ஆனில் கவனம் செலுத்துவதற்கு, அமைதியான, கவனச்சிதறலை ஏற்படுத்தாத இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். உடல் அல்லது மன அளவில் களைப்படையாத நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். பேசுவதன் மூலமோ அல்லது உங்கள் தொலைபேசியைப் பார்ப்பதன் மூலமோ உங்கள் ஓதலை குறுக்கிடுவதைத் தவிர்க்கவும். கவனத்துடன் ஓதுவதற்கு உங்கள் தொலைபேசியை அமைதிப்படுத்திவைக்கவும் அல்லது மற்றொரு அறையில் வைக்கவும்.


1. துஆ செய்யுங்கள்


குர்ஆனைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து பயன் பெறவும் அல்லாஹ்விடம் உங்கள் இதயத்தைத் திறக்கும்படிக் கேளுங்கள். குர்ஆனின் நூருடன் (பிரகாசத்துடன்) உங்கள் இதயத்தைப் பிரகாசிக்கும்படி அவனிடம் மன்றாடுங்கள். அல்லாஹ் (சுப்ஹானஹூ வ தஆலா) கூறுகிறான்: "...நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், "மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!" என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணைகற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.


[அல்குர்ஆன் 42:13]


பணிவு, தவ்பா மற்றும் கீழ்ப்படிதலுடன் உண்மையாக வழிகாட்டுதலை நாடுபவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். குர்ஆனுக்கு இதயத்தைத் திறப்பதற்கான சாவியானது, துஆவில் பிடிவாதமாக இருப்பதேயாகும்.


1. அல்லாஹ்வின் பாதுகாப்பை நாடுங்கள்


உங்கள் ஓதலில் சிந்தனையை (தத்ப்புர்) ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு ஷைத்தான் தன் முழு முயற்சியையும் செய்வான் என்பதால், இஸ்திஆதாவை (ஷைத்தானிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல்) கவனத்துடன் ஓதுங்கள். இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்: "குர்ஆன் ஓதுபவர், சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பை அல்லாஹ்விடம் கோரக் கட்டளையிடப்பட்டுள்ளார். ஏனெனில் கட்டளையிடப்பட்டவாறு குர்ஆனை ஓதுவது இதயத்தில் ஆழமான ஈமானை ஏற்படுத்தி, உறுதிப்பாட்டில், அமைதியில் மற்றும் நலமடைவதில் அதை அதிகரிக்கும்."


1. அல்லாஹ்வின் மீதான பயபக்தியை உங்கள் இதயத்தில் நிரப்புங்கள்


குர்ஆனிலிருந்து உண்மையாகப் பயன்பெற, அல்லாஹ்வின் பயபக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் இதயம் அதன் வழிகாட்டுதலுக்கு ஏற்கும் தன்மையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அவனுடைய வார்த்தைகள் ஆழமாக ஒலித்து உங்களை மாற்றும் வகையை ஏற்படுத்தும். அல்லாஹ் (சுப்ஹானஹூ வ தஆலா) குர்ஆனிலிருந்து அதிகம் பயனடைபவர்கள் அவனுக்கு பயந்து, அவனைக் கவனத்தில் கொண்டு நடப்பவர்கள் என்று நமக்கு அறிவிக்கிறான்: "...ஆகவே, என் எச்சரிக்கையைப் பயப்படுபவர்களுக்குக் குர்ஆனின் மூலம் நினைவூட்டுவீராக" (50:45).


1. உங்களுடன் பேசுபவர் யார் என்பதைச் சிந்தியுங்கள்


இமாம் அல்-ஃகஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அறிவுறுத்துவது: நீங்கள் குர்ஆன் ஓதத் தொடங்கும் போது, உங்களுடன் பேசும் இறைவனின் மகத்துவத்தை உங்கள் மனத்தின் முன்னணியில் கொண்டுவர வேண்டும். நீங்கள் ஓதும் வார்த்தைகள் ஒரு மனிதனிடமிருந்து தோன்றியவை அல்ல; அவை பிரபஞ்சங்களின் இறைவனின் வார்த்தைகள் ஆகும்.


"நான் எனது நஃப்ஸிடம் (உள்ளம்) கூறினேன்: 'நஃப்ஸே, அல்லாஹ் இதை உரையாற்றியபோது நீ அதனை (நேரடியாகவே) அவனிடமிருந்து கேட்டதாகக் கொண்டு குர்ஆனை ஓது.' அப்போது நான் (குர்ஆன் ஓதுவதில்) இனிமையை உணர்ந்தேன்." - சுலைமான் பின் மைமூன் (ரஹிமஹுல்லாஹ்)


1. அதை உங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பொருத்திக் கொள்ளுங்கள்


இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்: "நீங்கள் குர்ஆனிலிருந்து பயன்பெற விரும்பினால், அது ஓதப்படும்போது உங்கள் இதயத்தை ஒன்றுதிரட்டி, உங்கள் கேட்பதில் கவனம் செலுத்தி, அல்லாஹ்வினால் நேரடியாக உங்களுக்கு உரையாற்றப்படுவதைப் போல் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில் அது அவனுடைய தூதர் ﷺ-ின் நாவில், அவனிடமிருந்து உங்களுக்கான உரையாகும். அல்லாஹ் கூறினான்: 'யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.


[அல்குர்ஆன் 50:37]



இமாம் அல்-ஃகஸாலி (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்: "குர்ஆனில் உள்ள ஒவ்வொரு கூற்றிலும், தான் என்பவரே உரையாற்றப்படுபவர் என்று ஒருவர் கருத வேண்டும். எனவே, ஒரு கட்டளை அல்லது தடையை அவர் கேட்கும் போது, தான் என்பவரே கட்டளையிடப்படுபவர் மற்றும் தடுக்கப்படுபவர் என்று கருதுவார். ஒரு வாக்குறுதி அல்லது மிரட்டலை அவர் கேட்கும் போதும் அதையே செய்வார். கடந்த காலத்தின் கதைகளையும் நபிமார்களின் கதைகளையும் அவர் கேட்கும் போது, பொழுதுபோக்கு என்பது நோக்கமல்ல, மாறாக, அதிலிருந்து பாடங்களை எடுத்துக்கொள்வதும், தனக்குத் தேவையானவற்றை அதன் உள்ளடக்கத்திலிருந்து பிரித்தெடுப்பதுமே நோக்கம் என்பதை அவர் உணர்வார்."


குர்ஆனை ஓதும் போது, உங்கள் நிலைமைக்கு ஏற்றவாறு அதை தனிப்பட்ட முறையில் பொருத்திக்கொள்ள முயற்சிக்கவும். அதை உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உங்கள் சொந்த அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:


• அல்லாஹ் எனக்கு என்ன சொல்கிறான்?

•அல்லாஹ் என்ன செய்யும்படி கேட்கிறான்?

•அதை என் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்த முடியும்?


மேலுள்ள ஆயத்தில், ஆரோக்கியமான மற்றும் நல்ல இதயத்தைக் கொண்டிருத்தலின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குர்ஆன், நுழைவதற்கு ஏற்ற ஒரு இடத்தைக் கண்டால் மட்டுமே உங்களுக்கு பயனளிக்க முடியும்: அது தூய இதயமாகும். உங்கள் இதயம் ஷிர்க், பாவங்கள் மற்றும் இதய நோய்களிலிருந்து (எ.கா. பொறாமை, அகந்தை, வெறுப்பு, நயவஞ்சகம்) தூய்மை செய்யப்பட வேண்டும்.


"உங்களுக்கு முன்னிருந்தவர்கள் குர்ஆனை தங்கள் இறைவனிடமிருந்து வந்த கடிதமாகக் கருதினார்கள்; இரவில் அதைப் பற்றிச் சிந்தித்தார்கள், பகலில் அதை மீண்டும் மீண்டும் பார்வையிட்டார்கள்." - அல்-ஹசன் அல்-பஸ்ரீ (ரஹிமஹுல்லாஹ்)


1. கற்பனை செய்து பாருங்கள்


நீங்கள் ஓதும் வார்த்தைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, அவை வெளிப்படுத்தும் அர்த்தத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சிக்கவும். உதாரணமாக, ஜுஸ் அம்மாவில் நரக நெருப்பின் விளக்கங்களைப் படிக்கும் போது, அந்தக் காட்சியை உங்கள் மனதில் உயிரோடு வரவைக்கவும். இதை அடைய, தேவையான இடங்களில் ஆயத்தை மீண்டும் மீண்டும் ஓதுங்கள்.


1. உணர்வை அனுபவித்து ஆயத்தை மீண்டும் மீண்டும் ஓதுங்கள்


அதிலிருந்து வழிகாட்டலைப் பெறுவதற்கும், அல்லாஹ், அவனது தூதர் ﷺ மற்றும் மறுமை பற்றிய நமது ஈமானை அதிகரிப்பதற்குமே குர்ஆன் அருளப்பட்டது. அல்லாஹ் கூறுகிறான்: "...மேலும் அவர்களுக்கு (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காட்டப்படும் போது, அவை அவர்களின் ஈமானை அதிகரிக்கச் செய்கின்றன" (8:2). அதன்படி, சுவனத்தைப்  பற்றிய ஒரு ஆயத்தை ஓதும் போது, சுவனத்தின்  மீதான உங்கள் ஏக்கத்தை அதிகரிப்பதை உணரவும். உங்கள் இதயத்தில் இந்த விளைவை உணரும்போது, இந்த ஆயத்தை மீண்டும் மீண்டும் ஓதுங்கள். இதேபோல், நரக நெருப்பைப் பற்றிய ஒரு ஆயத்தை ஓதும் போது, உங்கள் இதயத்தில் பயத்தை உணரவும்.


இந்த விளைவை உணரும்போது, ஆயத்தை மீண்டும் மீண்டும் ஓதிக்கொண்டே இருங்கள். அது உங்களை அழவைக்கும் அளவிற்கு உங்களை உந்தட்டும். இதேபோல், அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பற்றிய ஒரு ஆயத்தைப் படிக்கும் போது, அவனுக்கு முன்னால் வெட்கத்தையும் மரியாதையையும் உணரவும். இந்த ஆயத்தை உங்கள் இதயத்தில் அதன் விளைவை நீங்கள் உணரும் வரை மீண்டும் மீண்டும் ஓதுங்கள்.


தராவீஹில் நீங்கள் கடைசியாக சூரத்து யூசுஃபைக் கேட்ட நேரத்தை நினைவுபடுத்த முயற்சிக்கவும். இமாம்  பிந்தைய ஆயத்த்களை ஓதியபோது, மூக்குச்சிணுங்கிய சத்தங்களையும், துணிகளைத் தேடி மக்கள் தங்கள் பைகளில் துழாவியதையும் நாம் கேட்டோம் அல்லவா? நமது ஈமான் பலவீனமாக இருந்தாலும், நமது இதயத்தை இழுக்கும் கதைகளில் அழுவது எளிது என்று நாம் காண்கிறோம், ஆனால் கொள்கை அதேதான்.


உங்கள் ஓதலில் ஒரு உணர்ச்சிகரமான கதை இடம்பெற்றாலும் சரி, அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பற்றிய ஆயத் இடம்பெற்றாலும் சரி, அது உங்களை உணர்வுபூர்வமாக உந்தட்டும்.


அது உங்கள் இதயத்தை ஊடுருவிச் செல்கிறதா எனப் பாருங்கள்.


"ஆதாமின் மகனே! சூராவின் முடிவை எட்டுவதே உனது ஒரே கவலையாக இருக்கும்போது, உன் இதயம் எப்படி மிருதுவாகும்?" - அல்-ஹசன் அல்-பஸ்ரீ (ரஹிமஹுல்லாஹ்)


மாலிக் பின் தீனார் (ரஹிமஹுல்லாஹ்) "'இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது அருளினோமாயின், அல்லாஹ்வுக்கு அஞ்சி அது பணிந்து, பிளந்து போவதை நீர் கண்டிருப்பீர்' (59:21) என்ற ஆயத்தை ஓதுவார், பின்னர் 'உங்களில்  சத்தியமாக, ஒரு அடியான் குர்ஆனை உண்மையாக நம்பினால், அவனுடைய இதயம் பிளந்து போகும்' என்று கூறுவார்."


1. ஆயத்த்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்


தன்னார்வத் தொழுகைகளின் போது நீங்கள் ஓதும் ஆயத்த்களுடன் தொடர்பு கொள்வதில் அல்லாஹ்வின் தூதர் ﷺ-ைப் பின்பற்ற முயற்சிக்கவும். நீங்கள் ரஹ்மத் (கருணை) பற்றிய ஒரு ஆயத்தைக் கண்டால், நில்லுங்கள் மற்றும் அல்லாஹ்விடம் அவனது ரஹ்மத்தைக் கேளுங்கள். தண்டனை பற்றிய ஒரு ஆயத்தை நீங்கள் கண்டால், நில்லுங்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோருங்கள். நீங்கள் துஆ செய்யக்கூடிய ஒரு ஆயத்தை நீங்கள் கண்டால், நில்லுங்கள் மற்றும் அல்லாஹ்விடம் கேளுங்கள்.


அவ்ஃப் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்: "ஒரு இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ-ுடன் தொழ நின்றேன். அவர் எழுந்து சூரத்துல் பகாராவை ஓதினார். அவர் ரஹ்மத் பற்றிய ஒரு ஆயத்திற்கு வந்தபோது, நின்று துஆ செய்தார், மேலும் அவர் தண்டனை பற்றிய ஒரு ஆயத்திற்கு வந்தபோது, நின்று அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்" (அபூ தாவூத்).


மஸ்ரூக் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்: "ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) பின்வரும் ஆயத்தை ஓதினார்:


فَمَنَّ اللَّـهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ


'எனினும் அல்லாஹ் எங்களுக்கு அனுக்கிரகம் செய்து, 'சமூம்' எனும் (நரக) வேதனையில் இருந்து எங்களைக் காத்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் (இணை வைப்பதின்றி) அவனையே அழைத்து வந்தோம். நிச்சயமாக அவனே (யாவருக்கும்) நன்மை செய்பவனும், மிக்க கருணை உடையவனுமாகும்' (52:27).


பின்னர் அவர் கூறினார்: 'இறைவா! எங்களுக்கு அனுக்கிரகம் செய்து, சமூம் எனும் (நரக) வேதனையில் இருந்து எங்களைக் காத்தருள்வாயாக.'" இந்தச் செய்தியைத் தெரிவிப்பவர்களில் ஒருவரான ஆமஷ், "இவர் இவ்வாறு தனது தொழுகையின் போதா சொன்னார்?" என்று கேட்கப்பட்டார். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார் (தஃப்ஸீர் இப்னு கத்தீர்).


உமர் பின் அல்-கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அதிகமாக அழுததால், அவரது முகத்தில் இரண்டு கருப்புக் கோடுகள் இருந்தன. ஒருமுறை, இரவில் மதீனாவைச் சுற்றிப் பார்வையிடும் போது, ஒரு வீட்டிற்கு அருகே சென்ற அவர், ஒரு மனிதர் தனது தொழுகையில் "தூர் மலையின் மீது சத்தியமாக!" (52:1) என்று ஓதுவதைக் கேட்டார், "நிச்சயமாக உம்முடைய இறைவனின் வேதனை நிகழத்தான் போகிறது. அதைத் தடுப்பவர் எவருமில்லை" (52:7-8) என்று ஓதும் வரை. உமர் (ரலியல்லாஹு அன்ஹு) "கஅபாவின் இறைவன்மீது சத்தியமாக, இந்த சத்தியம் உண்மையானது!" என்று கூறினார். அவர் தனது கழுதையிலிருந்து இறங்கி, சுவற்றில் சாய்ந்தார். அவர் சிறிது நேரம் அங்கேயே இருந்தார், பின்னர் வீட்டிற்குத் திரும்பினார். அடுத்த ஒரு மாதம் வரை, அவர் நோய்வாய்ப்பட்டே கிடந்தார். மக்கள் அவரைப் பார்ப்பதற்கு வருவார்கள், ஆனால் அவரது நோய்க்கான காரணம் தெரியாது.


"குர்ஆனை நேசிப்பவர், அல்லாஹ்வையும் அவனது தூதர் ﷺ-ஐயும் நேசிப்பவனாவான்." (அப்துல்லாஹ் பின் மஸஊத் ரலியல்லாஹு அன்ஹு)


1. குர்ஆனைப் படிக்கவும்


மேலே குறிப்பிட்டவற்றை (1-9) அடைவதற்கு, நீங்கள் குர்ஆனின் அர்த்தங்கள் மற்றும் செய்தியைப் படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதைச் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய சில வழிகள்:


• குர்ஆனின் அர்த்தத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த விஷயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல வகுப்புகள், புத்தகங்கள், பயன்பாடுகள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. எளிய மொழிபெயர்ப்பைக் கூட வாசிப்பது, ஒன்றையும் வாசிக்காதிருப்பதை விட சிறந்ததாகும்.

•அரபு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். இது குர்ஆனின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான வாயிலைத் திறக்கும்.

•குர்ஆன் வகுப்புகளில் கலந்துகொள்ளுங்கள். தீனின் பிற அறிவியல்களுடன் சேர்த்து குர்ஆனைப் படிப்பதன் மூலம் உங்கள் குர்ஆன் அறிவை அதிகரிக்கவும்.

•நம்பகமான தஃஸீர் (குர்ஆனின் விளக்கம்) விரிவுரைகளைக் கேளுங்கள்.

•நம்பகமான தஃஸீர் புத்தகங்களைப் படிக்கவும். இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


நீங்கள் எப்போதும் குர்ஆனின் வார்த்தைகளைச் சிந்திக்கும் போது, அல்லாஹ்வின் வேதத்தை உங்கள் சுய இச்சைகள் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப விளக்கும் பொறியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கும், அல்லது அறிவில்லாமல் அவனுடைய வார்த்தைகளைப் பற்றிப் பேசாமல் இருப்பதற்கும் கவனமாக இருங்கள்.


ஒரு ஆயத்தின் அர்த்தங்களை நீங்கள் படித்து, அதன் பின்னணி மற்றும் பாடங்களைப் புரிந்துகொண்ட பிறகு, நீங்கள் இன்னும் மனனம் செய்யாதிருந்தால், அதை மனனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்த ஆயத்த்களை உங்கள் தொழுகையில்—குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகையில்—ஓதுங்கள். இன்ஷா அல்லாஹ், உங்கள் தொழுகையின் இனிமையில் பெரும் வித்தியாசத்தை நீங்கள் உணருவீர்கள். நினைவில் கொள்ளுங்கள்: (1) தனிப்பட்ட முறையில் பொருத்திக்கொள்ளுங்கள், (2) கற்பனை செய்து பாருங்கள் மற்றும் (3) ஆயத்த்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!


"தன் வாழ்நாள் முழுவதும் அறிவைத் தேடிக் கழித்துவிட்டு, இந்த உலகத்தை குர்ஆனின் உண்மைகளைப் புரிந்துகொள்ளாமலோ, அல்லது அதன் இரகசியங்களையும் அர்த்தங்களையும் பற்றி அவனது இதயம் ஒருபோதும் உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளாமலோ விட்டுச் செல்பவனுக்கு, என்ன ஆழமான வருத்தமும் மாபெரும் இழப்பும்!" - இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)


ஆனால் நான் ஒரு அறிஞர் அல்லவே...?


தத்ப்புர் என்பது அறிஞர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தவறான கருத்து சிலரிடையே உள்ளது. இது உண்மையல்ல. தத்ப்புர் செய்யாததற்காக காஃபிர்கள் குர்ஆனில் கண்டிக்கப்பட்டனர். அல்லாஹ் (அஜ்ஜ வ ஜல்ல) கூறினான்: "அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? அல்லது அவர்களுடைய இதயங்களின் மீது பூட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா?" (47:24).


எனவே, முஃமின்களாகிய நமக்கு, தத்ப்புர் செய்வதில் தவறியதற்கு எந்த சாக்கும் இல்லை. தத்ப்புர் நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது மற்றும் அல்லாஹ்வுடன் வலுவான தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமானது.


"அல்லாஹ்வின் அடியார்களை குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில் (தத்ப்புர்) இருந்து தடுப்பது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் தத்ப்புர் மூலமாகவே ஹிதாயத் (வழிகாட்டுதல்) அடையப்படுகிறது என்பதை அவன் அறிவான்." - இப்னு ஹுபைரா (ரஹிமஹுல்லாஹ்)


"குர்ஆனை ஓதும் ஒருவர் அதன் அர்த்தத்தை அறியாதிருத்தல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் அதன் ஓதலில் இன்பத்தை எவ்வாறு அனுபவிப்பார்?" இமாம் அத்-தபரீ (ரஹிமஹுல்லாஹ்)

Comments